Saturday, September 20, 2014

நினைவு சூழ் தனிமை-3







தொலைத்த முகவரியின் முதல் வரி நீ.

காதலெனும் பெருங்குற்றம் மறந்தும் 
மரணமெனும் மன்னிப்பை தருவதில்லை, 
மாறாக நினைவெனும் ஆயுள்தண்டனை தந்துவிடுகிறது.

எடையற்று மிதக்கும் மேகத்துக்குள் 
அடைமழை ஒளிந்திருப்பதைப் போல் 
கையளவு இதயத்தில் கருங்கல் பாறைகளாய் 
உன் நினைவுகள்.

உன் நினைவு தீண்டாத சில நொடிகளில் 
நான் நானாகவே வாழ்ந்துவிடுகிறேன்.

உன்னை தொலைந்து போ என்றதும் 
வெகுவேகமாய் என்னை தொடர்கின்றன உன் நினைவுகள்.

எத்தனை வேகமாய் உன்னைவிட்டு விலகிப்போகிறேனோ 
அத்தனை வேகமாய் எதோவொன்று உன்னிடமே ஈர்த்துவிடுகிறது.

வெயில் கால எறும்பைப்போல் மனவெளியெங்கும் 
துளிதுளியாய் உன் நினைவை சேகரித்திருக்கிறேன், 
எஞ்சிய ஆயுளை வலியின்றி கழித்திட...

தொட்டுக் கொண்டிருக்கும் நினைவுகளையும் 
துரத்திக் கொண்டிருக்கும் கனவுகளையும் 
தொலைக்கத் தெரியாமல் தவிக்கும் 
என்னை நிரந்தரமாக விட்டுச்செல்.

நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் 
ஊசலாட வைக்கிறது,
உயிரற்ற நினைவு.

உன்னை வெறுக்கத் தொடங்கிய மனதில் 
உன் மீதான நேசம் மட்டும் வெளியேறாமல் 
உறங்கவிடாது உறுத்திக்கொண்டேயிருக்கிறது.

கரை தாண்ட துடிக்கும் அலையாய் உன் நினைவுகள், 
நித்தமும் நெஞ்சில் மோதிக்கொண்டேயிருக்கிறது, 
ஒருநாளேனும் உன்னை மறந்திட வேண்டுமென!

தூறல் விழுந்தவுடன் கிளர்ந்த மண்வாசனையாய் 
தூரத்தில் காற்றில் மிதந்து வந்த பாடல் 
உன்னை ஞாபகப்படுத்தி, 
கண்ணில் பெருமழையைத் தந்துசெல்கிறது

வறண்ட நிலத்தில் சாபமாய் விழும் 
தூறலைப் போலவே 
நீயில்லா நாட்களில் 
சந்தோசமாக இருப்பதாக காட்டிக்கொள்ள பிரயத்தனப்படுவதும்.

உன்னைப் பற்றி எழுதிய வார்த்தைகள் 
அர்த்தங்களை மட்டுமல்ல 
நமக்கான உணர்வுகளையும் சுமந்துகொண்டிருக்கிறது.

நீயில்லா தனிமையின் வெற்றிடம் தான்,
நீ நிரம்பியிருந்த என் உலகத்தை காட்டிக்கொடுக்கிறது.

திசைமறந்த பறவையொன்று 
முறிந்த சிறகு வழி, விரிந்தவானம் பார்ப்பதைப்போல் 
உன்னோடு வாழத்துடிக்கையில், 
உணரும் நீயில்லா நிதர்சனம்,
கொடுமையன்றி வேறென்ன.

விடை கொடுத்து பிரிகையில் நழுவும் கைகளினிடையே,
மெல்ல மெல்ல அதிகரிக்கும் தூரம் 
சொல்லாமல் சொல்லும், 
நீயில்லா என் தவிப்பை ....

முள்தைத்த காலில் முத்தமிட்டு தூக்கிச் சுமந்ததெல்லாம்,  
நெஞ்சை கிழிக்கும் தீரா ரணமாய் பிரிவை பரிசளிக்கவோ?

கடைசியாய் பேசிப் பிரிந்த நாளில்,
வலிமிகுந்த உன் குறுஞ்சிரிப்பு- 
என் வாழ்நாளுக்கான சாபம்!

நீ பிரிந்த பின்பு எந்தவொரு உறவும் 
நிச்சயமெனவோ நிலைக்குமெனவோ 
நம்புவதில்லை.