Wednesday, August 6, 2014

மோகத்திணை

முத்தமும் முத்தம் சார்ந்த தேடலும் மோகத்திணை  
  
உன் ப்ரியசகியாகிட வேண்டி
உன் ப்ரியம் கேட்கும் யாசகி நான்..

உன்மீதான அதீத பிரேமையினால்
அண்டவெளியெங்கும் உன்னைப்போலவே பிரமை.

சிமிட்டிடும் இமை நடுவே நிழலாடும்
உன் சிரித்த முகம் என் வாழ்நாள் வரம்
  
முன்நெற்றி விழும் முடியொதுக்கிவசீகரமாக  சிரித்துத் தொலையாதே,
இதயம் ரிக்டர் அளவுகளில் துடிக்கிறதெனக்கு.

உன்னைக்காணததுபோல் செல்ல யத்தனிக்கையில், 
மூன்றாம் பிறையொத்த  முன்நெற்றி சுருளொன்று, 
என்கவனம் களவாடி பார்வையீர்த்து காட்டிக் கொடுத்துவிடுகிறது,

அங்கங்கே விரவிக்கிடக்கும் சொற்களைவிட, 
எங்கும் வியாபித்திருக்கும்  மெளனத்தின் அழகாக
ஆயிரம் ஆண்களுக்கிடையில் சாலையைக் கடக்கும் நீ! 

என்னை கடந்து செல்கையில் நீ வீசும்  ஓரப்பார்வையால், 
என் அகத்தில் ஆயிரம் கலகம்  உருவாகி ஓய்ந்துவிடுகிறது.
  
எத்தனை வேகமாய் உன்னைவிட்டு விலகிப்போகிறேனோ 
அத்தனை வேகமாய் எதோவொன்று உன்னிடமே ஈர்த்துவிடுகிறது.

கள்ளத்தனமாய் பார்த்து உன்னிடம் மாட்டிக்கொள்ளும்போதெல்லாம்,
அந்திமாலைப்பொழுதில் அடர்வனத்தில் 
திசைமாறிய பறவையாய் தடுமாறிப்போகிறதென் பார்வை

 முகத்தில் நாணத்தின் செவ்வர்ண ரேகையுடன்
மனதில் விவஸ்தையற்ற அவஸ்தைகளை தரும்
அக்கணத்தில், என் மீதான உன் ஆளுமையை மிக அதிகமாக ரசிக்கிறேன்!
  
உந்தன் சின்னசின்ன ஆச்சர்யங்களில் 
இன்னுமின்னும் நீட்டிக்கிறது 
நம் காதலின் ஆயுள்.
  
ஈரக் குழல் நுழைந்த காற்றாய் 
தேகம் சிலிர்க்க வைக்கிறது
எதிர்பாராது நீ சிந்தும் இளநகை .
  
உன்னைச்சந்திக்க தயாராகையில் 
உனக்குபிடித்தமானவற்றைத் தேடித்தேடி அணிகின்றேன்,
நீவிரும்பாததென்று அறிந்தும் விட முடியாமல் 
வெட்கத்தை கைப்பற்றியபடி

உன்னோடு உரையாடும் இளமாலை பொழுது
இன்னும் தொடராதோ இந்தச் சாலையின் நீளம்
அப்படியே இந்த நொடி உறைந்திடாதோ   உள்ளம் ஏங்கிடும் நாளும்!

வழித்துணை நீயெனில்,
பாதையின் நீளமோபயணத்தின் களைப்போ,
வரமே எனக்கு !

 நானும் அவனுமாக கழிக்க நினைக்கும் காதல் பொழுதுகள்
நாணமும் அவனுமாக கடந்து போய்விடுகிறது.

உன் பார்வை எனை ஆளத்தொடங்கும் நொடியில்
பேச்சற்றுப் போகிறதென் கூச்சம்

ஆயுள்ரேகை பார்க்கிறேனென நீ கைப்பிடித்த நொடியில்
வெட்கரேகை பாய்கிறது என் முகத்தில்

எதேச்சையாய் பட்ட விரலொன்றினால் 
வீணையின் தந்திகள் அதிர்ந்தடங்குவது போல்,
தேகம் அதிர்ந்தடங்குகிறேன் சாலையைக் கடக்க நீ விரல் பிடித்த நொடியில்.


சாரல்மழையில்உன்னிரு கைகளில் நீ எனக்கும்
சேலைத்தலைப்பால் நானுனக்கும் குடைபிடிக்க
நமக்கு குடைவிரித்துச் சிரிக்கிறது காதல்.

பெருமழையில்நனைந்தபடி உன்னுடன் அலைபேசியில் பேசிசெல்கிறேன் 
கதகதப்பாக்கிகொண்டிருக்கிறது உன்குரல் 
தீமூட்டிக் கொண்டிருக்கிறது உன்வார்த்தைகள்

உன் பார்வை அத்துமீறும் போதெல்லாம் வேலியாய் என் வெட்கம்

ஒற்றை முத்தத்திற்காக நீ  கெஞ்சும்போதெல்லாம் 
பெண் என்னும் கர்வம் என்னுள் 
சற்றுத் தலைதூக்கி சிரிப்பது உண்மைதான்
  
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய் என்றான்,
சத்தமில்லாமல் வேகமாக ஒரு முத்தம் தந்தேன்.

எதிர்பாராமல் உன் தோளோடு மோதிய நொடியில் 
தழும்பாத நிறைகுடமாய் கண்ணியம் காத்து திரும்பி நிற்கிறேன்,
மனம் குறைகுடமாய் கூத்தாடிக்கொண்டிருக்கிறது.

கேசத்தில் இழைந்தோடும் அவன் கைகளால்,
அந்திவானத்தின் சிவப்பாய் நாணத்தில் இழைகிறதென் தேகம்;
அடர்வன மழையாய் மோகத்தில் இழைகிறதென் என் நாணம்
  
என் இடைவருடும் உன்னிரு விரலால் துளிர்க்கும் மோகம்
நீ இரண்டடி விலகியதும் தாபமாய் பெருக்கெடுகிறது.

உன் கைகளுக்குள் அடங்கிடாமல் திமிறுவதே
நீ இன்னும் கொஞ்சம் இறுக்கி அணைக்கத்தான்

கலைந்த கேசத்தில் கைகள் நுழைத்து  
காதல் வாசம் பிடித்துக்களைத்து, மூச்சின் வாசம் உணர முன்னேறுகிறாய் 
தவிர்க்கவா,தழையவா என தயக்கத்தில் நான்.

 உன் கன்னத்தில் பதித்த பின்னர்தான் 
என் இதழில் ரேகையிருப்பதை அறிந்தேன்..

 சில்லென பின்கழுத்தில் விழும் மழைத்துளியால் 
சிலிர்த்திடும் மயிர்க்கால்கள்,
உன் முதல் முத்தத்தை நினைக்கச்செய்கிறது
  
உன் நுனிவிரல் தீண்டல் தூண்டிடும் மோகம்,
தேகம் முழுக்க பற்றியெரிந்து,
ஓர் உஷ்ண பெருமூச்சில்
மடிந்து வெளிவரும் நானறியாமல்
  
எலும்பை ஊடுருவும் குளிரென கூசச் செய்கிறது
என் முதுகு துளைக்கும் உன் பார்வையும்,ஸ்பரிசமும்!
  
உன்மத்தம் பிடிக்கச் செய்கிறதுஉன் முத்தம்

சோவென பெய்யும் மழை,
மண்வாசத்தோடு,அன்றொரு மழைநாளில் நீ பொழிந்த 
முத்தச்சூட்டின் ஞாபகங்களையும்  சேர்த்து கிளர்ந்திட செய்தது.

காய்ச்சல்கொதிக்க தலைபாரத்தோடு இருந்தவனின் 
நெற்றியொற்றிப் பார்த்து,“ஒத்தடம்தரவா என்றேன்,
உன் “உதட்டு தடம்” கொடு சட்டென சரியாகும் என்கிறான்.

என் வெட்கங்களைச் சந்திக்காமல்
என்னை அடைவதில்லை 
உன் முத்தங்கள்

நீ சுவைக்க எனக்கு திகட்டுகிறதுஇதழ் முத்தம்.

அட எப்படிச் சொல்வதுனக்கு,
எத்தனை பெரிய ஊடலும் என்னை பேசவிடாது செய்யும் 
இந்த ஒற்றை முத்தத்திற்குத்தான் என
  
உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்து 
உதடுகள் மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருந்தது
அந்தமழைநாளின் முத்தத்தில்

ரகசியமமொன்றைச் சொல்லி விலகிடும் நொடியில்
பின்கழுத்தில் உந்தன் உஷ்ணமான மூச்சு
என்னுள் வெட்கச் சலனம் ஏற்படுத்தி ஓய்கிறது.
  
ஜன்னலோர இருக்கையில்
கண்ணாடியைத் தழுவியோடும் மழைநீரை 
கைபடாது தீண்டி உணர்வது போல் 
உஷ்ணம் சுமந்த உன் பார்வைகள்
என் இளமை தீண்டி செல்கிறது.
  
உணர்ச்சிவசப்படாது பார்த்துக்கொள்கிறேன்,
உன் வசப்படாமல் இருக்கத்தான் போராட்டமே