Sunday, October 27, 2013

ஹாஸ்டல் கலாட்டா

பொதுவா எல்லாரும் காலேஜ் லைஃப் மறக்கமுடியாதது, மிஸ் பண்ணிட்டோமேனு தான் ஃபீல் பண்ணுவாங்க.ஆனால் அந்த கேங்ல எல்லாரும் ஹாஸ்டல் லைஃபை மிஸ் பண்ணதுக்குத்தான் ரொம்ப ஃபீல் பண்ணாங்க, ஏன்னா அங்க அடிச்ச லூட்டியெல்லாம் வேறெங்க போயும் கண்டினியூ பண்ண முடியாதுல.

அப்படியே கண்ண மூடி ஸ்லோவா ஒரு கொசுவர்த்தியை க்ளாக் வைஸ் சுத்தினா, அந்த புகை மண்டலத்தின் முடிவில் கொங்கு மண்டலத்தின் பெயர் பெற்ற கல்லூரியொன்றின் லேடிஸ் ஹாஸ்டல் கேட் தெரிகிறது.

பல குடும்பங்களின் மாடர்ன் மாகலட்சுமிகள்  இருந்த/இருக்கின்ற/இருக்கப்போகின்ற இடம்.

ஃபர்ஸ்ட் இயர் ஃபர்ஸ்ட் டே, மம்மியைப் பார்த்த மந்திரி மாதிரி ரொம்ப பம்மி பம்மி உள்ள வரும் மாணவிகள் ஃபைனல் இயரில்  கட்சி தாவிய எம்.எல்.ஏ
போல் சவடால் விட ஆரம்பித்துவிடுவார்கள்.

சொர்ணக்கா மாதிரி வார்டன்  இருப்பாங்கனு நினைச்சா , இந்த வார்டன் மேடம் சாந்த சொருபம்.(அதுனால தான் கடைசிவரைக்கும் இந்த க்ரூப்பெல்லாம் ரொம்ம்ம்ம்ப நல்லவிய்ங்கனு சொல்லிட்டு இருந்தாங்க)

இதுவரைக்கும் ஹாஸ்டல் பத்தி கொடுத்த பில்டப்ஸ் போதும். இனி இந்தக் கல்லூரி வரலாற்றின் பக்கங்களில் கல்வியில் உயர்ந்தவர்களுக்கு இணையாக கலாய்த்தே உயர்ந்து தடம் பதித்த ஒரு க்ரூப்பை பத்தி பாக்கலாம். அவங்க வாங்குன பல்புகளும், கொடுத்த பல்புகளும் தான் இந்த கதையோட சாராம்சம்.

இந்த பேர்பெற்ற(பேர் என்னனு எடக்குத்தனமா கேட்காதிங்க,) கேங்ல மொத்தம் 10 பேர், அதுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம் எதுலயும் ஒத்துக்காது, ஆனா கலாய்த்தல்ங்கற ஜீவநதி அவங்க ரத்தத்துல ஊறி அவங்களை இணைச்சுருச்சு. சொல்ல மறந்தாச்சு, இந்த கேங் பேர் “டேர் டெவில்ஸ்”. நெசமாத்தானுங்கோ, பேயெல்லாம் அலறி ஒடற அளவுக்கு இவிய்ங்க ரவுசு ஓவரா இருக்கும்.

மொத்தம் 12 டிபார்ட்மெண்ட் அந்த காலேஜ்ல, அதுல 3 டிபார்ட்மெண்ட் மட்டும் பொண்ணுங்களே இல்லாத பாலைவனம்.
மத்த எல்லா டிபார்ட்ல இருந்தும் ஒரு பொண்ணாவது ஹாஸ்டல் இருந்த்தாங்க, அவிங்க தான் “டேர் டெவில்ஸின்”  திறமையான உளவுப்பிரிவு. அவங்கவங்க க்ளாஸ்ல யாரெல்லாம் என்னென்ன காரணத்துக்காக திட்டு வாங்கறாங்க எவ்ளோ மார்க் வாங்கறாங்க எந்த பொண்ணுக்கு ரூட் விடறாங்கங்கற வரைக்கும் எல்லா விசயங்களும் ஹாஸ்டலுக்கு இந்த தானைத்தலைவிகள் மூலமாதான் தெரிய வரும்.எல்லா க்ளாஸ் அப்டேட்ஸும்  நம்ம டெவில்ஸ்க்கு அத்துபடி, ஆனா  இவுங்களாம் யாருன்னு தான்  யாருக்கும் தெரியாது.

அந்த கேங்ல ஸ்கூல் படிக்கிற பாப்பா மாதிரி ஒரு குட்டிப்பொண்ணு, (பார்க்க மட்டுந்தான்) சவுண்டு சரோஜாவோட ஒண்ணுவிட்ட சொந்தக்காரி, செளமியா. 50 டெசிபல்க்கு கம்மியா அவ பேசினதேயில்ல. வெட்டி வேரு வாசம் பாட்டு பாடி சிக்னல் கொடுத்தா, வெளக்குமாறு பேசும்னு  எதிர்பாட்டு பாடற ஆள் நம்ம செளமி.

காவேரி தண்ணிய எதிர்பாக்குற தமிழ்நாடு மாதிரி ஒரு பையன்  செளமியையே ரொம்ப நாளா பாத்துகிட்டே இருந்தான். நம்ம செளமியும் கர்நாடகா மாதிரி அப்பப்ப ஒரு லுக் விட்டுவிட்டு க்ராஸ் பண்ணுவா. அந்தப் பையனுக்கு நம்ம  கோலிவுட் ஹீரோ போல திடீர்னு ஒருநாள் தைரியம் வந்து யார்யாரையோ புடிச்சு செளமி நம்பர வாங்கிட்டான்.

கேர்ள்ஸ் ஹாஸ்டல்ல மொபைல் நாட் அலவ்டுனு ஒரு ரூல்ஸ். ரூல்ஸ் போடறதே அத பிரேக் பண்ணத்தான, சோ, நம்ம மக்கள் குறைந்தபட்சம் ஆளுக்கொரு செல்போனும், 4 சிம் கார்டும் வைச்சுருந்தாங்க.க்ளாஸ் டைம்ல ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவைச்சுட்டு,ரூமுக்கு வந்ததும் அதுக்கு உயிர் கொடுப்பாங்க.இந்த  செல்போன் ரகசியம் தெரியாம நம்ம பையன் ஒருவாரமா கால்பண்ணி பாத்து தேவதாஸா மாற க்வாலிஃபையாகிருந்தான்.

அப்ப,வேற எதொவொரு நல்ல உள்ளம், அவன்கிட்ட 5 மணிக்கு மேல ட்ரை பண்ணு மச்சினு சொல்லிருக்கு இவன் என்னடா இது, கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்பிடி ஓடும்னு யோசிச்சு கேட்டுருக்கான், அந்த நல்ல உள்ளமோ, “நம்பிக்கை, அதானே எல்லாம்” அப்படினு சொல்லிட்டு போய்டுச்சு. அப்றமா ஒரு நல்ல நாள்ல ப்ரோபோஸ் பண்ண ப்ளான் பண்ணி, 6 மணி வரைக்கும் கொஞ்ச நேரம் காலேஜ சுத்த, க்ரவுண்டுக்கு ஒரு ரவுண்டு போகனு டைம்பாஸ் பண்ணான்.

டெவில்ஸ் எல்லாம் கேண்டீன்ல அவங்க வட்டமேஜை மாநாட்ட முடிச்சுக்கிட்டு 6 மணி வாக்குல கூடு திரும்புனாங்க. இன்னிக்கு கொஞ்சம் போரடிக்குதுல்ல அப்படினு யோசிக்கும் போது செளமிக்கு ஒரு மிஸ்டு கால் வந்துச்சு, அடடா ஆடு சிக்கிருச்சேனு எல்லாரும் சந்தோசத்தோட செளமி கட்டில்ல வந்து உக்காந்துட்டு, அப்புறமா அந்த கால் அட்டெண்ட் பண்ணியாச்சு.பேசுறது இந்த பையன் தான் தெரிஞ்சதும்,லவுட் ஸ்பீக்கர்ல போட்டுட்டு பேச ஆரம்பிச்சுச்சு செளமி.

பையன் - செளமி.
செளமி- ம்ம், சொல்லு.
பையன் - உன்கிட்ட ஒண்ணு சொல்லனுமே.
செளமி(விரலால் சைகை காமித்து கிசுகிசுக்கும் டெவில்ஸை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு) - சரி, நாளைக்கு க்ளாஸ்ல சொல்லு.
பையன் - இல்ல,இல்ல நான் இப்பவே சொல்லனும்.
செளமி-- என்ன சொல்லு.
பையன் -- நான் உன்ன லவ் பண்றேன், நீயும் என்ன லவ் பண்ற???? பண்ணனும் !!!!!

இதுவரை சிரமம்பட்டு அமைதியைக் கட்டிக்காத்த டெவில்ஸ் எல்லாம் இப்போது கோரஸாக லவுட் ஸ்பீக்கரில் ”ஓ” வெனக் கத்த பையன் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டான். ஆனாலும் வெளிய காட்டிக்காம, “ எனக்கு டைம் ஆச்சு, கெளம்பனும், அம்மா தேடுவாங்க” அப்படினு சொல்லி சமாளிச்சான்.

செளமி-(காது கேட்காத மாதிரி) என்ன!!!என்ன சொன்ன திரும்ப சொல்லு.

உடனே டெவில்ஸ் கூட்டம் திரும்ப கோரஸா, “ஆத்தா வையும், வீட்டுக்குப் போகனும், லவ் பண்றேனு சொல்லு”னு அமைதிப்படை ரஞ்சிதா குரலில் கத்தி ஒரே கலாட்டா.லைன் கட்டாயிடுச்சு,திரும்ப கால் பண்ண, சுவிட்ச் ஆஃப் :))

அன்னைக்கு மெஸ்ல மஷ்ரூம் பிரியாணிய விட இதுதான் ஹேப்பியான விசயம்.அதன்பிறகு அவனை கடக்கும் போதெல்லாம் இந்த கோரஸ் பாடி கலாட்டா பண்றதுக்கு மிஸ் பண்ணவேயில்ல,பித்தாகரஸ் தியரத்த மறந்தாலும் இந்த கோரஸை அவங்க லைஃப்க்கும் மறக்கல.

சரி சரி கடைசில செளமியும் அந்த பையனும் லவ் பண்ணாங்களா இல்லையானு கேட்கறிங்களா, அத அடுத்த போஸ்ட்ல சொல்றேன்.

Saturday, October 5, 2013

கண்கள் நீயே,காற்றும் நீயே----முப்பொழுதும் உன் கற்பனைகள்

வெகு சமீபத்தில் தான் இந்த பாடலை கேட்டேன்.முதல் தடவையிலேயே மிகப் பிடித்த பாடல்களில் ஒன்றாகிவிட்டது.GV மியூசிக்கில் சைந்தவி வாய்ஸ் எப்பவும் என் ஃபேவரைட். இந்தப் பாட்டு அதற்குச் சற்றுமிளைக்காமல் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டது.

மெல்லமாய் பல்லவி ஆரம்பிக்கையில் மனதின் சஞ்சலங்களெல்லாம் சற்றே குறைந்தார்போலொரு உணர்வு. மழலைச் செல்வம் கிடைத்தப்பின் ஒரு பேதைப் பெண்ணுக்கு அதுவே அவளது உலகமாகி,காணுமிடமெல்லாம் தன் குழந்தையாய் தோன்றுகிறது.

   கண்கள் நீயே..காற்றும் நீயே, தூணும் நீ ..துரும்பில் நீ

  வண்ணம் நீயே ..வானும் நீயே, ஊணும்நீ ..உயிரும் நீ

பத்து மாத காலத்தின் பாரங்கள் தாங்கிய கனவிற்கு,உயிர் கொடுத்து தன்னுருக் கொண்ட சிசு முகம் பார்த்து நினைவாகும் நொடியில் அத்தனை ஏக்கங்களும் தீர்ந்து போகிறது-தாய்க்கு.

பல நாள் கனவே

ஒரு நாள் நனவே

ஏக்கங்கள் தீர்த்தாயே

”ஏக்கங்கள் தீர்த்தாயே”  என்கையில் மீண்டும் மீண்டும் அந்த வரியைக் கேட்க  ஏக்கமாகிவிட்டது.

சித்தாராவின் குரல் செவியில் சாரல் மழை.

வரிக்கு வரி அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார் தாமரை.

ஒரு தாயின் சுகவேதனையை,அவள் பெண்மைக்குப் பெருமை சேர்த்திடும் தருணத்தை மிக அழகாக,எளிமையாக அதே சமயம் வலி மாறாது எழுதியிருக்கிறார், தாமரை.

எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்

நான் தான் நீ ..வேறில்லை

மெல்லிய அதிர்வுடன் ஆரம்பிக்கும் அடுத்த வரிகள்,குழந்தையின் எச்சிலைக் கூட ரசித்துப் பார்க்கும் தாய்மனத்தின் அழகை உணர்த்தும்.

முகம் வெள்ளை தாள்

அதில் முத்தத்தால்

ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே

இதழ் எச்சில் நீர்

எனும் தீர்த்ததால்

அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே


தானுடுத்தும் ஆடைக்கு, தான் மானம் காத்ததற்காக நன்றி சொல்லாமல் தன் மகனுக்கு மெத்தையாய் போனதற்காக நன்றியோடு நினைத்துப் பார்க்கும் தாய்மையை என்னவென்று சொல்ல…


தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதிவேளை


கைக்குழந்தையின் அர்த்தமற்ற ஓசையை இசையாகவும், பொருளற்ற வார்த்தையை புது மொழியாகவும் பாவித்துப் பார்ப்பது தாய் மட்டுமே.

”ஈடில்லா என் மகன்” எனும்போது, சித்தாரவின் குரலில் தொனிக்கும் தாயின் பெருமிதமும்,கர்வமும் நமக்கும் தொற்றிக் கொள்ளும்.


பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ”ஈடில்லா என்மகன்”


தன் கண்பார்வையிலேயே வைத்துக் கொண்ட குழந்தை, நடை பயிலத் துவங்கும் நேரம் கொஞ்சம் பார்வையை விட்டு விலகினாலும் தவித்துப் போகும் தாய், பேசாமல் எந்த ஆபத்துமின்றி மீண்டும் பத்திரமாய் தன் கர்ப்பத்திலே வைத்துக்கொண்டாலென்ன., என நினப்பது இயல்பே.

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்



பெரும்பாடு பட்டு தான் பெற்ற மகன், தன் இதய தேசத்தின் அரசன் வாழ்வில் வெற்றி பெற, வெகுமதியாய் தன் ஆசியை விட பெரிதாய் வேறென்ன தர முடியும்-ஒரு தாயால்!.

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் சோம்பாது,பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

நைட் தூங்கறதுக்கு முன்னாடி ஹெட்செட்ல கேட்டுப் பாருங்க... you will like it :)