ஓராயிரம் பேர் என்னை சுற்றி இருந்தாலும் ,
மின்னல் ஒளியை போல் உன் நினைவு என்னை தாக்குகிறது.
அந்த ஒரு நொடியில் ,
இருக்குமிடத்தையும் மறந்து மனம் பறக்க தொடங்குகிறது !
நிலவின் வருகையில் தொடங்கி நீண்ட கதைகள்
சூரிய உதயத்திற்கு பின்னும் முடியாமல் ;
அரைகுறை மனதாய்
அலைபேசிக்கு ஓய்வு கொடுத்து முடிந்த அந்த நாட்கள்;
நினைவலையில் கண நேரத்தில் மோதும் போதெல்லாம்
ஆயிரம் அதிர்வுகள் அடுத்தடுத்து தாக்கும் இதயத்தை ;
சதா என்னை தவிக்க செய்யும் அதே கேள்வியுடன்!!!!
இமைகளின் தவிப்பை அறிந்து ,
இருக்குமிடம் தெரிந்து ,
கண நேரத்தில் தோன்றி கவலை மறக்க செய்த அந்த நொடிகள் ;
நொறுக்கி விடுகின்றன என் கோபத்தை!!
திரும்ப திரும்ப உன் முகம் பார்க்க ,
ஒரு முறையாவது உன் குரல் கேட்க ,
சிறு குழந்தையென அடம்பிடிக்கும் இதயம் ,அதை
சில்லு சில்லாய் உடைத்து விடாதே !
தயவு செய்து எனக்கும் கற்று கொடு,
ஆசையில் துடிக்கும் மனதையும்,
ஆவலில் தவிக்கும் கண்களையும்,
மற்றவர்களுக்கு தெரியாமல் எப்படி மறைப்பது என்று ?
நித்தமும் என் நெஞ்சில் சத்தமாய் கேட்கும் கேள்வியை ,
ஒரே ஒரு முறை உன்னிடம் கேட்கிறேன்,
"எப்போது வருவாய் கோபம் மறந்து,
கொஞ்சும் விழிகளுடன் நெஞ்சை நெகிழச் செய்ய ?”
No comments:
Post a Comment